மதுரவாயல் அருகே வாகன சோதனையில் நாட்டு வெடிகுண்டுடன் சிக்கியவர் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி, மே 20: மதுரவாயல் அருகே வாகன சோதனையில் 2 நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவர் வைத்திருந்த பையில் நாட்டு வெடிகுண்டு, வீச்சரிவாளை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் சிக்னல் அருகே மதுரவாயல் போக்குவரத்து போலீசார் நேற்று பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

மேலும், அந்த நபர் வைத்திருந்த பையை போலீசார் வாங்கி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அந்த நபர் மோட்டார் சைக்கிள் மற்றும் பையை விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் தலைதெறிக்க மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்துவிட்டார். இதனால் பதறிப்போன போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் துணியால் சுற்றியபடி ஒரு வீச்சரிவாள், இரண்டு நாட்டு வெடிகுண்டுகளும் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அந்த பையை அப்படியே வைத்து விட்டு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை செய்தனர். மேலும், வேறு ஏதாவது வெடி குண்டுகள் உள்ளனவா என்பது குறித்து சோதனையும் செய்தனர். அதில், இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்று செயல் இழக்க வைத்தனர். இதையடுத்து மதுரவாயல் போலீசார் அரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வெடிகுண்டு மற்றும் அரிவாளை கொண்டு வந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய அந்த நபர், யாரை தீர்த்து கட்ட நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாளுடன் வந்தார் என்பது குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் வெடிகுண்டுகள், வீச்சரிவாளுடன் மர்ம நபர் பைக்கில் வந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரவாயல் அருகே வாகன சோதனையில் நாட்டு வெடிகுண்டுடன் சிக்கியவர் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: