மாவட்டத்தில் 91.13 சதவீதம் பேர் தேர்ச்சி

 

சேலம், மே 20: சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இது கடந்த ஆண்டை விட 3.1% சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தின் தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் வெளியிட்டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் 537 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 21,835 மாணவர்கள், 21,593 மாணவிகள் என மொத்தம் 43,428 பேர் தேர்வெழுதினர். இதில், 19,168 மாணவர்கள், 20,410 மாணவிகள் என மொத்தம் 39,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நடப்பாண்டில் மாணவர்கள் 87.79 சதவீதமும், மாணவிகள் 94.52 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.13 ஆகும். கடந்த ஆண்டு 89.47 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு 3.1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் நடப்பாண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 288 அரசு பள்ளிகளை சேர்ந்த 25,521 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 22,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுபள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.09 ஆக உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு 347 மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர். அதன்படி, ஆங்கிலத்தில் 9 பேர், கணிதம் 165, அறிவியல் 158, சமூக அறிவியலில் 15 பேரும் 100க்கு 100மதிப்பெண் எடுத்துள்ளனர். இதேபோல், நடப்பாண்டு 520 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதினர். இவர்களில் 457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.88 சதவீதம் ஆகும். தேர்வு முடிவுகள் வெளியீட்டின் போது, மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், பாலசுப்ரமணியம், தங்கவேல், மாதேஷ், சந்தோஷ், சிஇஓ நேர்முக உதவியாளர்கள் சிவக்குமார், காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மாவட்டத்தில் 91.13 சதவீதம் பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: