சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்தி வரப்பட்ட, ரூ.2 கோடி மதிப்புடைய 3.8 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஒரு பெண் பயணி உட்பட 6 பயணிகளை கைது செய்து விசாரிக்கின்றனர். இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் இரவு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க பசை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
அதை தொடர்ந்து, இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சோதித்த போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணியின், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப் பசையை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். 2 விமானங்களிலும், இலங்கையில் இருந்து வந்த 4 பயணிகளிடம் இருந்து, ரூ.1.21 கோடி மதிப்புடைய 2.3 கிலோ தங்கம் பசையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து 4 பயணிகளையும் கைது செய்தனர். இதற்கிடையே, துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக, துபாய்க்கு போய்விட்டு திரும்பி வந்தார். சந்தேகத்தில் பெண் சுங்க அதிகாரிகள், அந்தப் பெண் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது, அவருடைய, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 852 கிராம் தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சர்வதேச மதிப்பு ரூ.45 லட்சம். அந்தப் பெண் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்தப் பயணிகளிடம் நடத்திய விசாரணையில், இதே கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஆண் பயணி, துபாயிலிருந்து கடத்தல் தங்கத்துடன் ஹைதராபாத் வழியாக உள்நாட்டு விமானத்தில், சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள், சென்னை உள்நாட்டு முனையத்திற்கு சென்று, ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியிடம் இருந்து, மறைத்து வைத்திருந்த 702 கிராம் தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.37 லட்சம். இதையடுத்து அவரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், இலங்கை,துபாய் ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு சர்வதேச விமானங்களிலும், உள்நாட்டு விமானத்திலும் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய 3.8 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு பெண் பயணி உட்பட 6 பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் 3.8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண் பயணி உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.
