திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் அமைய உள்ள துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் இடத்தை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் அமைய உள்ள துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமையும் இடத்தை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் சென்ற தமிழக தலைமைச் செயலர் வெ. இறையன்பு, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். இதில், சங்க உறுப்பினர்களிடம் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் தேவையான வசதிகள் குறித்தும் ஆலோசித்தார். அதை தொடர்ந்து திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழில்முனைவோர் கூட்டமைப்பினர்களுடன் இணைந்து ரூ.47.62 கோடி திட்ட மதிப்பில் ரூ.33.33 கோடி தமிழ்நாடு அரசின் மானியத்துடன் தொடங்க உள்ள துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75.00 லட்சம் மானியத்துடன் ரூ.330.00 லட்சம் திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இன்போக்கஸ் எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ரூ.10.50 லட்சம் மானியத்துடன் ரூ.34.00 லட்சம் திட்ட தொகையுடன் பட்டியலின வகுப்பை சார்ந்த நபருக்கு கடனுதவி வழங்கப்பட்ட தியாகராஜா மிஷினிங் ஒர்க்ஸ் நிறுவனத்தையும் ஆய்வு செய்தார் .

இந்நிகழ்வின்போது குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறை செயலர் வி.அருண்ராய், சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ். மதுமதி, குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறையின் கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய, பொது மேலாளர், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளர் மற்றும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

The post திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் அமைய உள்ள துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் இடத்தை தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: