அதிக வெப்பம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்: கத்திப்பாரா மேம்பாலம் அருகே பரபரப்பு

சென்னை: கத்திப்பாரா மேம்பாலம் அருகே பைக் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புனித தோமையார் மலை மத்தியாஸ் நகரை சேர்ந்தவர் தேவதாஸ் (59). சுயதொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று, இவர் தனது மனைவி பிரான்சினா மகள் ஆல்பினா (12) ஆகியோரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு பெசன்ட் நகர் மாதா கோயிலுக்கு சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, கிண்டி மேம்பாலம் அருகே வந்தபோது வாகனத்தின் முன்பாகத்தில் இருந்து திடீரென கரும் புகை வந்தது. உடனே, கைக்கில் இருந்த 3 பேரும் அவசரமாக வாகனத்தில் இருந்து கிழே இறங்கி ஓடி சென்று சிறிது தூரத்தில் நின்றனர்.

அதற்குள் வாகனம் முழுவதுமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சில நிமிடங்களில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிகவெப்பம் காரணமாக வாகனம் தீப்பற்றி எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரி தமிழ்ப்பாண்டி’ தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிக வெப்பம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்: கத்திப்பாரா மேம்பாலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: