கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிநியமனத்தில் தமிழருக்கு அநீதி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு.வெங்கடேசன் கடிதம்..!

சென்னை: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்; கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 மற்றும் 173 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி, அதிர்ச்சி தருவது, நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது. தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிரச்சனை மெரிட் எனும் வகையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் ஓபிசி, எஸ்.சி.எஸ்.டி. என்ற விவரங்கள் இல்லை. மெரிட்டில் வரக்கூடிய இட ஓத்துக்கிட்டு பிரிவினரை இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் சரிக் கட்டக் கூடாது என்ற நெறிகள் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.

பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமூகத்தில் உள்ளது. துரதிருஷ்டம். ஆனாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டும் வருகிறது. முதல்வர் பதவிக்கு நேர்காணல் அழைக்கப்பட்ட பழங்குடியினர் 58 பேரில் 28 மீனாக்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் தேர்வர்களில் ஒரு மீனா கூட இல்லை. இது அப்பட்டமாக தெரிகிற ஒரு உதாரணமே. வெளிப்படையான பட்டியல் ஆக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்சிஎஸ்டி தேர்வர்கள் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்காதன் தெரிவிக்க வேண்டும். ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தமிழர்களுக்கும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிநியமனத்தில் தமிழருக்கு அநீதி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சு.வெங்கடேசன் கடிதம்..! appeared first on Dinakaran.

Related Stories: