பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மே 7ல் அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை: பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7600 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிந்த பிறகு 10ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி 70 மையங்களில் நடந்து வருகிறது. இந்த பணி 24ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது டம்மி எண்கள் நீக்கி உரிய பதிவு எண்கள் போடும் பணி நடக்கிறது. அதற்கு பிறகு மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்படும். இந்நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தேர்வு முடிவுகளை மே 5ம் தேதி வெளியிட ஏற்கனவே தேர்வு துறை அறிவித்திருந்தது. ஆனால் பட்டியல் தயாரிக்கும் பணிகள் குறிப்பிட்ட தேதியில் முடியாது என்பதால் மே 7ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. அதே நேரம் மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதனால் முதல்வருடன் ஆலோசித்து பின்னர் புதிய தேதி அறிவிக்கப்படும். திட்டமிட்டபடி மே 5ம் தேதி தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம். அதனால் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

The post பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மே 7ல் அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: