ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தேர் திருவிழா

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், 1006 அவதார உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமானுஜர் தேர் திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீராமானுஜர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஸ்ரீ ராமானுஜர் அவதார பிரம்மோற்சவம் 10 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 13ம் தேதி அன்று ராமானுஜர் 1006ம் ஆண்டு பிரம்ம உற்சவம் விழா தொடங்கியது. இதில், ராமானுஜர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிம்ம வாகனம், தங்க பல்லுக்கு, புஷ்ப பல்லுக்கு, யாளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, மாலை இரு வேலையும் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

விழாவின், 9ம் நாளான நேற்று முன்தினம் பழம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கபட்ட தேரில் ஸ்ரீ ராமானுஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக உற்சவமூர்த்திக்கு பால், தயிர், குங்குமப்பூ, சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று `கோவிந்தா… கோவிந்தா…’ என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தேர் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: