ராஜஸ்தானில் முந்தைய பாஜ ஆட்சியின் ஊழல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து போராடுவேன்: சச்சின் பைலட் அதிரடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முந்தைய பாஜ ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து போராடப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறி உள்ளார். ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜ ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாகவும், அதைப் பற்றி அதன் பின் வந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் குற்றம்சாட்டி வருகிறார். இந்த ஊழல்கள் தொடர்பாக அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பைலட் கடந்த 11ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

விரைவில் ராஜஸ்தானில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கெலாட்-சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதல் மீண்டும் வெடித்துள்ளது காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் ஜட்கட் சிவன் கோயிலில் நேற்று வழிபட்ட சச்சின் பைலட் அளித்த பேட்டியில், ‘‘உண்மையை பேசுவது, ஊழல், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது காங்கிரசின் மதிப்புகளில் ஒன்றாகும். இதைப் பின்பற்றி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினேன். ஆனால் 2 வாரமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். பின்வாங்க மாட்டேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது கட்சிக்கு நன்மை பயக்கும்’’ என்றார். சொந்த கட்சியை எதிர்த்து மூத்த தலைவரான பைலட் போராட்டத்தை தொடருவேன் என கூறியிருப்பது ராஜஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ராஜஸ்தானில் முந்தைய பாஜ ஆட்சியின் ஊழல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து போராடுவேன்: சச்சின் பைலட் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: