பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 19 பேருக்கு போலி பணி ஆணை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம், சிறுமாங்காடு ஊராட்சியில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 19 பயனாளிகள் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பணி ஆணை பெற்றவர்களில் சிலர் வீடு கட்டி முடித்துள்ளனர். எனினும், வீடு கட்டி முடித்தவர்களுக்கு இதுவரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பணம் வழங்கப்படவில்லை.

இதில் சந்தேகமான பயனாளிகள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ‘நாங்கள் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் பணி ஆணை பெற்று வீடு கட்டி முடித்துள்ளோம். ஆனால், இதுவரை எங்களுக்கு அதற்கான பணம் கிடைக்கவில்லை’ என்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அவை போலி எனத் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுமாங்காடு ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், சிறுமாங்காடு ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவர் கன்னியப்பன், அதே பகுதியை சேர்ந்த வாசு ஆகிய இருவரும் பிரதம மந்திரி வீடு திட்டத்தின்கீழ் போலி பணி ஆணை தயாரித்து 19 பயனாளிகளுக்கு வழங்கியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மாலை போலி பணி ஆணை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் கன்னியப்பன், வாசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 19 பேருக்கு போலி பணி ஆணை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: