லண்டன் மாநகரில் கர்னல் ஜான் பென்னி குயிக் சிலை; கருப்புத் துணியால் மூடப்பட்டு சிலை சேதமடைந்துள்ளது: எடப்பாடி பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் “பெரியாறு அணை ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஜீவாதாரமாக உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை வறட்சியைப் போக்கி 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி ஏற்படுத்தி, 10 மாவட்டத்தின் குடிநீர் தேவையை போக்கியது முல்லை பெரியாறு அணை.

இந்த அணையை தன் சொந்த செலவில் கர்னல் ஜான் பென்னி குயிக் கடும் போராட்டத்திற்கு இடையில் கட்டி முடித்தார். தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற கர்னல் ஜான் பென்னி குயிக்கிற்கு அதிமுக அரசு மணி மண்டபம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த அரசு ஜான் பென்னி குயிக் அவர்களுக்கு லண்டன் மாநகரில் மார்பளவு சிலை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

தற்போது கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களின் சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டுள்ளது. சிலை சேதமடைந்துள்ளது. தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த கர்னல் ஜான் பென்னி குயிக் சிலை அவமானப்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

மூடிய சிலையை திறக்க வேண்டும்? தொடர்ந்து பராமரிப்பிற்கு இந்த அரசு ஏதேனும் ஏற்பாடு செய்துள்ளதா?” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் “அரசு விவரங்களை அறிந்து நடவடிக்கை எடுத்து அவையில் அறிவிக்கப்படும்” என்றார்.

The post லண்டன் மாநகரில் கர்னல் ஜான் பென்னி குயிக் சிலை; கருப்புத் துணியால் மூடப்பட்டு சிலை சேதமடைந்துள்ளது: எடப்பாடி பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: