குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அதிர்ச்சி

ஓசூர், ஏப்.12: ஓசூர் பெரியார் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெரியார் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் இணைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில், கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த குடிநீரை குடிக்கவும், மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, உடனடியாக ஆழ்துளை கிணறுகளில் இருந்து இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜ., மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் பாட்டில்களில் நீரை நிரப்பி எடுத்துச்சென்று ரயில் நிலைய சாலையில் திரண்டனர். அங்கு, குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: