திருவனந்தபுரம் அருகே காதலை கைவிட மறுத்த வாலிபரை கடத்தி நிர்வாணப்படுத்தி சித்ரவதை: கல்லூரி மாணவி கைது

திருவனந்தபுரம்: காதலை கைவிட மறுத்த வாலிபரை கூலிப்படையை ஏவி கடத்தி நிர்வாணப்படுத்தி தாக்கிய கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே அயிரூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதற்கிடையே லட்சுமி பிரியாவுக்கு அதே கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவனுடன் காதல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து லட்சுமி பிரியா வர்க்கலா வாலிபரை தவிர்க்க தொடங்கினார். ஆனால் அந்த வாலிபர் காதலை கைவிட மறுத்தார். தொடர்ந்து லட்சுமி பிரியா தனது காதலனுடன் சேர்ந்து வர்க்கலா வாலிபரை கூலிப்படையை ஏவி தாக்க திட்டமிட்டார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு எர்ணாகுளத்தை சேர்ந்த 6 பேர் அடங்கிய ஒரு கூலிப்படையுடன் சேர்ந்து லட்சுமி பிரியா வர்க்கலா வாலிபரை அவரது வீட்டிலிருந்து வெளியே வர வைத்து காரில் கடத்தினார்.

பின்னர் காரில் வைத்து வாலிபரை கூலிப்படை சரமாரியாக தாக்கியது. அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின், ஐபோன் மற்றும் ஐந்தாயிரம் பணத்தை அந்தக் கும்பல் பறித்தது.

இதன் பின்னர் எர்ணாகுளத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் அந்த வாலிபரை அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி அந்த கும்பல் தாக்கியது. கட்டாயப்படுத்தி கஞ்சா மற்றும் பீரை குடிக்க வைத்துள்ளனர். பீர் பாட்டிலால் அந்த வாலிபரை தாக்கினர். அதை செல்போனில் வீடியோ எடுத்த லட்சுமி பிரியா ரூ.5 லட்சம் தராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். மறுநாள் அந்த வாலிபரை வழியில் விட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றது. இதற்கிடையே வாலிபரை கடத்தி நிர்வாணப்படுத்தி தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது. உடனே அந்த வாலிபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து எர்ணாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி பிரியாவையும், கூலிப்படையை சேர்ந்த அமல் என்பவரையும் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காதலை கைவிடுவதற்காக கூலிப்படையை ஏவி வாலிபரை கல்லூரி மாணவி கடத்திய சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவனந்தபுரம் அருகே காதலை கைவிட மறுத்த வாலிபரை கடத்தி நிர்வாணப்படுத்தி சித்ரவதை: கல்லூரி மாணவி கைது appeared first on Dinakaran.

Related Stories: