கொரோனா பரவல் எதிரொலி 2 நாள் ஒத்திகை இன்று தொடக்கம்

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் தயார்நிலையை ஆய்வு செய்வதற்கான 2 நாள் மாதிரி ஒத்திகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டுமென சமீபத்தில் நடந்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தயார்நிலை ஏற்பாடுகளை உறுதி செய்வதற்கான 2 நாள் ஒத்திகை நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. டெல்லி எய்ம்ஸில் உள்ள ஜாஜர் வளாகத்தில் நடக்கும் ஒத்திகையை ஒன்றிய அமைச்சர் மாண்டவியா ஆய்வு செய்ய உள்ளார். இதே போல, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் அந்தந்த மாநிலங்களில் நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சிகளை பார்வையிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 5,357 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • தற்போது 32,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.

The post கொரோனா பரவல் எதிரொலி 2 நாள் ஒத்திகை இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: