திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாசி கடைசி ஞாயிற்றுக் கிழமை முதல் பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமை வரையிலான 28 நாட்கள் அம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார். இதனால் அம்மன் உடல் உஷ்ணத்தில் கொதிப்பதை கட்டுப்படுத்தவே பூச்சொரிதல் விழா என்ற பெயரில், பல்வேறு வகையிலான மலர்களைக் கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைப்பது வழக்கம். இதற்காக திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கார வண்டிகளில் மலர்களை கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பிக்கின்றனர். கடந்த 12ம் தேதி அம்மன் பச்சை பட்டினி விரதம் துவங்கியது. இதில் பூச்சொரிதல் முதல் வாரம் என்பதால் சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அம்மனுக்கு கோயில் யானை மீது வைத்து பூத்தட்டு எடுத்து வரப்பட்டு சாற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று 3வது வார ஞாயிற்றுகிழமை என்பதால் இரவு முதல் விடிய விடிய ஏராளமான அலங்கார ரதங்களில் பக்தர்கள் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.