9வது நாளாக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

ஈரோடு, மார்ச் 27:  தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசின் ஓராண்டு அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய ‘‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி மக்களின் கனவுகளைத் தாங்கி” எனும் தலைப்பிலான அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஈரோடு-சத்தி சாலையில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில், கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் அரசின் சாதனைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மகளிர் சுய உதவிக்குழுவின் சாலையோர உணவகம், சிறுதானியம் மற்றும் பல்வேறு உணவுடன் கூடிய உணவுத்திருவிழா, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப் பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு, மாணவர்களுக்கு பயிற்சி முகாம்கள், பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி 9வது நாளான நேற்று அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் கலை நிகழ்ச்சிகள், சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இன்றுடன் கண்காட்சி நிறைவுபெறுகிறது.

Related Stories: