நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை

திருச்சி: நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை மாதம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே வரவேற்கப்படுகிறது. சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்ற, முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள்:

ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான, பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகியன தகுதியான விளையாட்டுப் போட்டிகளாக எடுத்துக்கொள்ளப்படும். 31.01.2023 தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000லிருந்து ரூ.15,000க்குள் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்/மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை. முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. விண்ணப்பிக்க 19.04.2023 கடைசி நாள். மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.                                 

Related Stories: