×

பரமக்குடியில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் நகரசபை கூட்டத்தில் முடிவு

பரமக்குடி: பரமக்குடி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். அப்போது நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து தலைவரிடம் விளக்கினர். உறுப்பினர் வடமலையான் பேசும்போது, பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சி ஆணையாளர் தற்போது தேவகோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் வாரத்தில் மூன்று நாட்கள் தேவகோட்டை சென்று விடுகிறார். எனவே இங்குள்ள அடிப்படை தேவைகள் குறித்து புகார் தெரிவிக்க பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் என்றார்.

மேலும் பரமக்குடி நகராட்சியில் நடைபெறும் ஒப்பந்த புள்ளிகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகவும், அவ்வாறு நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என நகரசபை கூட்டத்தில் விைரவில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் திருமால்செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல் மாலிக், பாக்கியம் ஜீவரத்தினம், பிரபா, ராதா தனலட்சுமி, நகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





Tags : Paramakudi ,
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...