வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

ஈரோடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர்கள் நேற்று நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.  4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாரணையை வெளியிட வேண்டும்.  அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

 ஈரோடு மாவட்டத்தில் இப்போராட்டத்தின் காரணமாக ஈரோடு, பவானி, கோபி, அந்தியூர், சத்தி, நம்பியூர், தாளவாடி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய தாலூகா அலுவலகங்களில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.  ஈரோடு குடிமைபொருள் வழங்கல்துறை, கலால் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்கள் ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றதால் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தது. இதே போல், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களும் பூட்டப்பட்டிருந்தது.  மாவட்டம் முழுவதும் 440 வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர். வருவாய்துறையினர் போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.  

Related Stories: