திருச்சி: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 527 மனுக்கள் பெறப்பட்டது. அதிக மனுக்கள் பெறப்படுகின்ற நாள் என்றால் அதிக நேரம் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டமானது 527 மனுக்கள் பெறப்பட்ட போதிலும் குறைந்த நேரத்தில் நடந்து முடிந்தது. இதற்கு காரணம், மாவட்ட கலெக்டர் சிறிது மாற்றம் செய்து இக்குறைதீர் கூட்டத்தைச் செயல்படுத்தியது தான். இதற்கு முன்னர் நடந்த குறைதீர் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் கூட்ட அரங்கின் உள்ளே பெறப்பட்டு கணினி மூலம் மனுக்களுக்கான ரசிது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கலெக்டரின் ஆலோசனையின் பேரில் அது தற்போது மாற்றப்பட்டு நேற்று வெளியே உள்ள நிழற்குடை பகுதியில் வழங்கப்பட்டது.