கலைஞர் நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஆலந்தூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணி விழாவையொட்டி லிபர்ட்டி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பாக எழுச்சி தமிழன் லிபர்ட்டி மாரத்தான் 2023, ஓட்டம் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான இணையதள பதிவு மற்றும் மாரத்தான் ஓட்ட டி.சர்ட் அறிமுக நிகழ்ச்சி வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை அரங்கில் நேற்று நடந்தது. நிகழச்சிக்கு திருமாவளவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, கல்லூரி தாளாளர் சர்தார் மஞ்சித்சிங் நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, இணையதள பதிவினை தொடக்கி வைத்து, மாரத்தான் ஓட்ட லோகோ மற்றும் டி.சர்ட்டினை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இளைய சமுதாயத்தினர் மத்தியில் மாரத்தான் மிகவும் பிரபலாகி வருகிறது. கலைஞர் நினைவு மாரத்தான் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 4ம் ஆண்டு நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான பதிவு ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாரத்தானில் 1 லட்சத்திற்கும் மேலானோர் பங்கேற்க உள்ளனர். உலகிலேயே அதிகம் பேர் பங்கேற்ற மாரத்தானாக கலைஞர் நினைவு மாரத்தான் இருக்கும்.  திருமாவளவன் மணி விழாவினையொட்டி ஆகஸ்ட் 13ம் தேதி நடக்கும் மாரத்தானில் நாங்களும் கலந்துகொள்ள உள்ளோம்.

இதில் நான் 10 கிலோமீட்டர் தூரம் ஓட இருக்கிறேன். நடப்பது, ஓடுவது உடற்பயிற்சியில் சிறந்தது. இதற்கான ஒரு அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் சுகாதாரத்துறை அறிவிக்கவுள்ளது,’’ என்றார்.  நிகழ்ச்சியில் லிபர்ட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பி.சுரேஷ், செயலாளர் அப்துல்ரகுமான், முற்போக்கு மாணவர்கழக மாநில துணைச் செயலாளர் நெப்போலியன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வேளச்சேரி இளையா, பகுதிச் செயலாளர் ரவனை சலீம், வல்லூர் ரவிமணி, கோ.ரமேஷ், மோனீஸ்வரன், வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: