வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு செந்நாய் கடித்ததா? என விசாரணை

சேலம், மார்ச் 19: சேலத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சேலம் அழகாபுரம் அடுத்த பெரியபுதூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (67). விவசாயியான இவர், வீட்டில் 10 ஆடு மற்றும் 6 மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற இவர், இரவு வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று காலை, பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்றார். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகளும், வயிற்றில் கடிக்கப்பட்டு குடல் வெளியே வந்தபடி இறந்து கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த நஞ்சப்பன், இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இரவில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை, தெருநாய்கள் கடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், அனைத்து ஆடுகளும் வயிற்றிலேயே கடிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதால், இதற்கு செந்நாய் கூட காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்பு அதேபகுதியில் ஒருசில வீடுகளில் கட்டியிருந்த மாடுகளும், இதேபோல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, அப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: