சேலம், மார்ச் 19: சேலத்தில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அழகாபுரம் அடுத்த பெரியபுதூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (67). விவசாயியான இவர், வீட்டில் 10 ஆடு மற்றும் 6 மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற இவர், இரவு வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று காலை, பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்றார். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகளும், வயிற்றில் கடிக்கப்பட்டு குடல் வெளியே வந்தபடி இறந்து கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த நஞ்சப்பன், இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.