கோயம்பேடு பகுதியில் திடீர் மழை: காய்கறி, பூ விற்பனை மந்தம்

அண்ணாநகர்: கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பெய்த திடீர் மழையால், காய்கறி, பூ விற்பனை மந்தமாக நடைபெற்றது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் வேலைக்கு சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், மழை காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கம்போல் வருகின்ற புறநகர் வியாபாரிகள் வருகை குறைந்தது.

இதனால், காய்கறி, பழம் மற்றும்  பூக்கள் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது. இதுகுறித்து காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திடீரென பெய்த மழை காரணமாக காய்கறி, பழம், பூ வாங்க புறநகர் வியாபாரிகள் குறைந்த அளவில் வந்தனர். இதனால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது’’ என்றார்.

Related Stories: