ஆவடி, மார்ச் 18: ஆவடியில் உள்ள எச்.வி.எப் மைதானத்தில் புத்தக திருவிழாவை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். ஆவடியில் 1வது புத்தக திருவிழா ஆவடி எச்.வி.எப்.மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆவடி ஆணையர் க.தர்ப்பகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், புத்தகக் கண்காட்சியை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார். அமைச்சர் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் புத்தகம் வாங்குவதும், வாசிப்பு பழக்கமும் குறைந்துள்ளது. இதைத் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
தற்போதைய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்களுக்கு அதிகளவில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதே நோக்கமாகும். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆவடி, எச்.பி.எப். மைதானத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இந்த கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். அதுமட்டுமின்றி, நாள்தோறும் மாலை நேரங்களில் சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் தமிழ் பண்பாட்டை சேர்ந்த பேச்சாளர்கள் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பேசினார். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர், ஆவடி மாமன்ற உறுப்பினர்கள், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், ஆவடி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.