பவானி, மார்ச்17: அம்மாபேட்டை - அந்தியூர் ரோட்டில் அம்மாபேட்டை பிரிவு அருகே ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை வங்கி ஊழியர்கள் அகற்றி விட்டனர். இந்த நிலையில், வங்கிக்கு பண பரிவர்த்தனை தொடர்பாக நேற்று முன்தினம் சென்ற திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் பங்க் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், முதலமைச்சரின் படம் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, மீண்டும் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், வங்கி நிர்வாகத்திடம் என்ன காரணத்தால் அகற்றப்பட்டது எனக் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.