பவானி, மார்ச்17: கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் கோயில்களில் கோடை காலத்தை கருத்தில்கொண்டு பழச்சாறு, நீர்மோர் வழங்குமாறு அறநிலையத்துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நீர் மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்க திட்டமிடப்பட்டது.