ஈரோடு: சென்னிமலை அருகே பிஆர்எஸ் ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் தற்போது 30 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில், கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்றபோது கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று தவறி விழுந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். அது குறித்து, உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் அந்தப் பாம்பை பிடித்தனர். பின்னர் அதை சென்னிமலை வனக் காவலர் மகாதேவனிடம் ஒப்படைத்தனர்.