ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு காய்ச்சல் முகாமில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இன்ப்ளூயன்சா எச்3என்.2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உடல் வலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், வாந்தி போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது. இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களை அதிக அளவில் தாக்கி வருகிறது.
இந்த காய்ச்சலை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 இடங்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. ஈரோடு மாநகரப் பகுதியில் புதுமை காலனி மற்றும் வளையகார வீதி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள் உதவியாளர்கள் உடன் இருந்தனர். பொது மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்தனர். குறிப்பாக முதியவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி காய்ச்சல் இருந்தால் அதற்கு உண்டான மாத்திரை வழங்கப்பட்டது. காய்ச்சல் அதிக அளவில் இருந்தால் அவர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதைப்போல் பள்ளிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்களில் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்தில் இருந்து 5000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் மக்கள் சிறப்பு காய்ச்சல் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் சிறப்பு காய்ச்சல் முகாமில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் கூறினார்.