காப்பி அடிப்பதை தடுக்க 145 பறக்கும்படை அமைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 20,875 மாணவ, மாணவிகள் எழுதினர். காப்பி அடிப்பதை தடுக்க 145 பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள 118 அரசு, தனியார் பள்ளிகள், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 68 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 23,948 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 87 தேர்வு மையங்களில் நேற்று நடந்த தேர்வில், 20,875 பேர் தேர்வெழுதினர். 3,073 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. மேலும், மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஓசூர் அருகே பாகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாவட்டம் முழுவதும் தேர்வை கண்காணிக்க 145 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தேர்வை கண்காணித்தனர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பிடிஏ தலைவர் நவாப் மற்றும் நிர்வாகிகள் மாணவிகளுக்கு, இனிப்பு- பூக்கள் வழங்கியும், ஆசிரியைகள் தேர்வு எழுத வந்த மாணவிகளை ஆரத்தி எடுத்தும் வாழ்த்தி அனுப்பினார்கள்.

Related Stories: