அமைந்தகரையில் நள்ளிரவு பரபரப்பு பிளாட்பாரத்தில் பைக் மோதியதில் தென்காசி கல்லூரி மாணவன் பலி: நண்பர் கவலைக்கிடம்; போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் படுவேகமாக சென்ற பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள பிளாட்பாரத்தில் மோதியது. இதில், பைக் ஓட்டிவந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில், பைக் ஓட்டி வந்த வாலிபர் அதே இடத்தில் உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள், படுகாயம் அடைந்த நபருக்கு முதலுதவி செய்ததுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கல்லூரி மாணவரின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவரை அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அதில், உயிரிழந்த நபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம்(21) என்பதும், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் 3ம் ஆண்டு படித்துவந்ததும், படுகாயம் அடைந்தவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவபாரதி(21) என்பதும், இவர் அதே மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், வடபழனி அழகிரி நகர் பகுதியில் வசித்துவரும் நண்பர் வெள்ளைபாண்டி என்பவரை பார்ப்பதற்கு தென்காசி மாவட்டத்தில் இருந்து பைக்கில் சென்னைக்கு வந்ததுள்ளனர். பின்னர், அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு அண்ணாநகரில் பிரியாணி கடை நடத்திவரும் மற்றொரு நண்பர் விஷ்ணுவை பார்க்க பைக்கில் சென்றபோது இந்த விபத்து நடந்ததும் தெரிய வந்துள்ளது.

Related Stories: