வேளச்சேரி: வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று, பீரோவில் இருந்தரூ.3.45 லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தரமணியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தரமணி, மகாத்மா காந்தி நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமாரி (65). இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் திருமணமாகி, தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால், சாந்தகுமாரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர், நேற்று அதிகாலை தனது வீட்டுவாசலில் கோலம் போட்டுவிட்டு, உள்ளே சென்றுள்ளார். பின்னர், அந்த பகுதியில் துணி வியாபாரம் செய்துவரும் பெண் ஒருவர், பணம் வாங்குவதற்காக சாந்தகுமாரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. சாந்தகுமாரி அருகில் உள்ள கடைக்கு சென்று இருப்பார். திரும்பி வந்துவிடுவார் என நினைத்து அந்த பெண் வியாபாரி வீட்டின் வெளியில் காத்திருந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதும் எதுவும் தகவல் இல்லை. வெளியில் எங்காவது நீண்ட தூரம் சென்றிருந்தால், வீட்டை பூட்டாமல் எப்படி சென்று இருப்பார் என நினைத்த அந்த பெண் வியாபாரி, சந்தேகத்தின் பேரில் கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது, சாந்தகுமாரி அசைவற்று கிடந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது, மூதாட்டி கன்னத்தில் பலத்த காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரிந்தது.