இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு ரயில்

சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், 138 ஓட்டுநர் இல்லாத  மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில்  பணிகள் முடிந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை, வண்ணாரப்பேட்டை  முதல் விமான நிலையம் வரை என இரு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி  வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல்,  வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக  ஆலந்தூரை அடையும் வகையில் இன்னொரு வழித்தடமும் உள்ளது. மெட்ரோ ரயிலில்  செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சென்னையில் மக்கள் வரவேற்பின் அடிப்படையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்ரூ.61,843  கோடியில்  தொடங்கி உள்ளது. மாதவரம்- சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி  - கலங்கரை விளக்கம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 118.9 கி.மீ.  தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று  வருகின்றன.  இந்த இரண்டாம் கட்ட பணியில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க  திட்டமிடப்பட்டிருந்தது. இவற்றில் ஓட்டேரி பட்டாளம், பெரம்பூர், அயனாவரம்,  புரசைவாக்கம், அடையாறு டிப்போ, இந்திரா நகர், தரமணி, திருவான்மியூர் உள்பட  48 ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் வரும் 2026ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கவும்  கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்  பணியில் திட்டமிடப்பட்டிருந்த டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன்  பூங்கா, மீனாட்சி கல்லூரி மற்றும் தபால் பெட்டி ஆகிய ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இவைகளுடன், செயின்ட்  ஜோசப் கல்லூரி ரயில் நிலையம் என 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம்  கைவிடப்படுகிறது. இதன் மூலம், திட்டப் பணிக்கான செலவில்  ரூ.1,200 கோடி வரை குறையும் என மெட்ரோ அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த  நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு  மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2ம்  கட்டத்தில் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக  அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். பெட்டி எண்ணிக்கையை உயர்த்த நிர்வாகம்  திட்டமிட்டுள்ள நிலையில் ரயில் சேவைகளை அதிகரிக்கவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: