ஈரோடு, மார்ச் 11: பிரசித்தி பெற்ற ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் பொங்கல் விழா மார்ச் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. ஈரோடு நகரின் பிரசித்தி பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 21ம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து, 25ம் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிசேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறும். 29ம் தேதி இரவு 7.30க்கு அன்ன வாகன ஊர்வலம், இரவு 10.30க்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர். அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து, ஏப்ரல் 4ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, ஏப்ரல் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோயிலில் தேரோட்டமும் நடைபெறும். ஏப்ரல் 6ம் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 7ம் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30க்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. இதையடுத்து, 8ம் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். இதில், பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களைச் சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் எடுத்துச் செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.தொடர்ந்து, இறுதி நிகழ்ச்சியாக ஏப்ரல் 9ம் தேதி காலை 10.30க்கு மறு பூஜையுடன் விழா நிறைவுபெறும்.