ஈரோடு: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ”எங்கும் தமிழ் எதிலும் தமிழ், பிற மொழிகளை வாழவைத்து தன்னையும் காத்து நிற்கும் மொழி. தமிழ்மொழியே, தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு, தனி மொழியானதும் தமிழே தமிழ் மொழியானதும் தமிழே” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர். தொடர்ந்து, சம்பத் நகர் வழியாகச் சென்று, அங்குள்ள நவீன நூலகத்தில் பேரணி நிறைவடைந்தது.