கிருஷ்ணகிரி, மார்ச் 9: கிருஷ்ணகிரி அருகே, மாற்றுத்திறனாளியின் செயற்கை காலை பறித்துக் கொண்டு மிரட்டும் பாஜ., பிரமுகர் உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் ராணுவ வீரர் தனது குடும்பத்துடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பெலவர்த்தி பஞ்சாயத்து, வள்ளுவர்புரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இளங்கோ. இவர் தனது குடும்பத்தினருடன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான், விபத்து ஒன்றில் காலை முழுவதுமாக இழந்து, செயற்கை கால் பொருத்திக் கொண்டு, பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இதே கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., கட்சி பிரமுகர் மயில்வேலன் மற்றும் வேலு, ராஜா, செல்வகுமார் ஆகிய 4 பேரும், எனது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை மறித்து, ₹1 லட்சம் கொடுத்தால் மட்டுமே, பாதை தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டினர். இது குறித்து கலெக்டரிடம் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தேன். அதன் பேரில், வருவாய் துறை அதிகாரிகள் வந்து விசாரணை செய்து, பிரச்னையை சரி செய்தனர்.