கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் 3,363 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் சார்பில் “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்து, குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசியதாவது: “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டம், பர்கூர் ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் துவங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களில், மிக கடுமையான ஊட்டச்சத்து குறையுள்ள 939 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, தலா 2 ஊட்டசத்து பெட்டகம் என 1,878 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,485 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டசத்து பெட்டகம் என மொத்தம் 3,363 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படவுள்ளது.