வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

தேனி, அக். 1: வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என தேனியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறை இணை இயக்குநர் அனுசியா வரவேற்றார். இக்கூட்டத்தில் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, வேளாண்மைக்கான கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் , மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின்போது, வேளாண்மை விரிவாக்க மையங்களில் சம்பா பருவத்திற்கு தேவையான நெல்விதைகள் 75 மெட்ரிக் டன்னும், பயிறு வகைகள் 46 மெட்ரிக் டன்னும், எண்ணை வித்து பயிர் விதைகள் 7 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 1248 மெட்ரிக் டன்னும், டிஏபி 566 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 565 மெட்ரிக் டன்னும், கலப்பு உரங்கள் 2,327 மெட்ரிக் டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் வட்ட அளவில் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் உரிய முதன்மை சான்று இணைக்கப்படாத 1230 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விற்பனை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பசுந்தாள் உரங்களான தக்கைப்பூண்டு, சணப்பு ஆகிய விதைகள் இருப்பு நிலவரம் குறித்தும், மானியம் குறித்தும், பாரம்பரிய நெல் ரகம் குறித்த தகவல்களை விரைந்து வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், பூதிப்புரம் பகுதியில் கரும்பு பயிரினை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் சோலார் மின்வேலி அமைத்திட வேண்டும் எனவும், காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும், காய்கறி மொத்த கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும், காய்கறிக்கு முதன்மை பதனிடும் நிலையம் அமைக்க வேண்டும், பிடிஆர் கால்வாயை தூர்வாரி 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், 18ம் கால்வாயின் இருபுறமும் மரங்கள் அமைக்க வேண்டும்,

சோத்துப்பாறை அணையில் மீன்பிடித்திட அனுமதி வழங்க வேண்டும், சோத்துப்பாறை அணை பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும், அகமலை பகுதியை சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாத்தலமாக உருவாக்கிட வேண்டும், புலி காப்பக பகுதியில் மலை மாடுகள் மேய்ப்பதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும், கூடலூர், கம்பம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அரசு நிலங்களில் அமைக்க வேண்டும், முல்லைப்பெரியாறு பேபி அணையை பலப்படுத்த வேண்டும், ரூல்கவ் முறையை ரத்து செய்ய வேண்டும், அரசு கால்நடை மருத்துவமனைகள் மதியம் 12 மணி வரை செயல்படுவதை மதியம் 2 மணி வரை செயல்பட உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தினை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்க தெரிவிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: