போச்சம்பள்ளி. செப்.30: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் மாதம்பதி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27), மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலை, கொடமாண்டப்பட்டி கிராமத்தில் விவசாயி முருகன் என்பவரது தோட்டத்தில், தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மட்டை ஒன்று தொங்கியபடி கீழே விழும் நிலையில் இருந்தது. அந்த மட்டையை பிடித்து மணிகண்டன் இழுத்தபோது, தென்னை மரத்தை ஒட்டியபடி சென்ற மின்கம்பியில் தென்னை ஓலை பட்டதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மரத்தில் தொங்கிய நிலையில், மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்களை வரவழைத்து, மணிகண்டன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.