வேப்பனஹள்ளி அருகே தக்காளி, வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்

வேப்பனஹள்ளி, ஜூன் 14: வேப்பனஹள்ளி அருகே வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பதினோறு யானைகள், 3 குழுக்களாக பிரிந்து நடமாடி வருகின்றன. இவற்றை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் எடுத்து வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கர்நாடக வனப்பகுதியில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதாலும், தற்போது வேப்பனஹள்ளியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் நல்ல மழை பொழிந்து நீர் தேங்கியுள்ளதாலும், வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தக்காளி, மா, வாழை, ராகி, நெல் என அனைத்து வகையான பயிர்களும் செழித்து வளர்ந்துள்ளதாலும், யானைகள் தமிழக வனப்பகுதியிலேயே தங்கி இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை உண்டுவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று தங்கி விடுகின்றன.வனத்துறையினர் யானைகளை விரட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், யானைகள் இடம் மாற்றி ஒவ்வொரு நாளும் வேறு வேறு பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு, கொங்கனப்பள்ளி மற்றும் பூதிமுட்லு ஆகிய கிராம பகுதியில் நுழைந்த யானைகள், அப்பகுதியில் உள்ள வாழை மற்றும் தக்காளி பயிர்களை நாசம் செய்தன. யானைகளின் தொடர் நடமாட்டத்தால், பயிர்களை காவல் காக்கவோ, அவற்றை அறுவடை செய்யவேர் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லாத காரணத்தால், பயிர்கள் மற்றும் மாங்காய்கள் ஆகியவை விளைநிலங்களிலேயே வீணாகி வருகின்றன. இதனால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, 20பேர் கொண்ட வனத்துறை குழுவினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: