குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தை கொலை விஏஓ அலுவலகத்தில் கணவர் சரண்

சிவகாசி, ஜூன் 11: வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் விஏஓ முன் சரணடைந்தார். விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து (28). மனைவி காயத்ரி (25) தனியார் பள்ளியில் ஆசிரியை. இவர்களது மகன் கோகுல்ரட்சகன் (4 மாத குழந்தை). சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னையில் கொத்தாளமுத்து மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவரது குழந்தையையும் தலையணையால் முகத்தை அழுத்தி கொன்றார்.

வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தாளமுத்துவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் விஜயகரிசல்குளம் விஏஓ காமராஜ் முன் கொத்தாளமுத்து சரணடைந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று மனைவி கோபித்துகொண்டு அவரது தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறினார். இதில் ஆத்திரமடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அப்போது அழுது கொண்டிருந்த குழந்தையையும் தலையனையால் முகத்தை அழுத்திக் கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: