வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்

நாமக்கல், ஜூன் 9: நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடிக்க வேண்டும் என, அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் தலைமையில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பேசியதாவது:

தமிழக முதல்வர் அறிவித்த திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் தாக்கல் செய்தபோது வெளியிடப்பட்ட மானிய கோரிக்கை அறிவிப்புகளை செயல்படுத்த, விரைந்து பணியாற்ற வேண்டும்.

வேளாண்மை துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாதிரி செயல் விளக்க திடல்கள் தயார் செய்து, அதனால் அடையும் பயன்கள் குறித்து விவசாயிகளை நேரடியாக அழைத்து சென்று விளக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது, உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையினர் வளர்ச்சித்திட்ட பணிகளை, குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன், வருவாய்த்துறை அலுவலர்களின் பணிகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, ஆர்டிஓ.,க்கள் மஞ்சுளா, இளவரசி, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் செல்வகுமரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: