சிவகாசி, மே 20: சிவகாசி பகுதியில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், ஆலைகளில் 20 சதவீத பட்டாசு மட்டுமே தற்போது தயாரிக்கின்றனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தடை ெசய்யப்பட்ட பட்டாசு தயாரிப்பதை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், டெல்லியில் இருந்து 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் சிவகாசி தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் அக்கரைப்பட்டி, வெற்றிலையூரணி கிராம பட்டாசு ஆலையில் ஆய்வு நடத்தினர். அப்போது மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உடனிருந்தார்.