ராமநாதபுரம், மே 19: சென்னை, கடலூர், தஞ்சை, நாகபட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 13 தமிழக கடலோர மாவட்டங்களில் மீன் வளம் காக்க மீன்பிடி தடை காலம் ஏப்.15ல் தொடங்கி, ஜூன் 15 வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்களாக இருந்த ஒன்றிய அரசின் உத்தரவுப்படி கடந்த 2000ம் ஆண்டில் இருந்து 61 நாட்களாக உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது.
இக்கால கட்டத்தில் விசைப்படகுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் உள்ளிட்ட பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006ல் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடைக்கால நிவாரண தொகை கடந்தாண்டு வரை ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் இன்றைய விலை உயர்விற்கேற்ப நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.