விழுப்புரம், மே 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றுக்காக திருக்கோவிலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீசார், தி.மண்டபம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் பழங்குடியின இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்களை அழைத்து சென்றனர். அப்போது ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பழங்குடியின இருளர் பெண்களை, காட்டு பகுதிக்கு அழைத்து சென்று திருக்கோவிலூர் போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, திருக்கோவிலூர் ஆய்வாளர் னிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் உள்ள 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்கள் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.