தஞ்சாவூர், மே 11: திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் வனத்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தஞ்சை மாநகராட்சி கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ சேவை அமைப்புகள் சார்பில் இசை வனம் எனும் இசைக் கருவிகள் தயாரிக்கும் மரங்கள் வளர்க்கும் பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இசையுலக வரலாற்றில் இசைக்கருவி தயாரிப்பிற்கு பயன்படும் மரங்களை ஒருங்கே, ஒரு இசைக் கல்லூரி வளாகத்தில் பராமரிக்க திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்வு இதுவே முதன்மையாகும். மரம் மண்ணின் வரம். இந்த மரங்கள் இசைக்கருவிகளாக உருமாறி நம் செவிக்கு தேனினும் இனிய பாடல்களாக ஒலிக்கின்றன. இசைக்கருவிகள் தயாரிப்பிற்கு நம் தஞ்சை உலகளாவிய பெருமை பெற்றது. நம் தஞ்சாவூர் வீணை மற்றும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் அதன் தரத்திற்கான புவிசார் குறியீடு பெற்றவை.