திருச்சி, ஏப்.28:நுண்ணீர் பாசன கருவிக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார். தாட்கோ பாஸ்ட்டிராக் திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் தோட்டக்கலை துறையின் கீழ் நுண்ணீர் பாசன கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஒரு எக்டேர் வரையுள்ள குறு, 2 எக்டேர் வரையுள்ள சிறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியம், 5 எக்டேர் வரையுள்ள இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியத்தில் கருவிகள் வழங்கப்படும். குத்தகை நிலமாக இருந்தால் 7 ஆண்டுகளுக்கு பதிவு செய்திருக்க வேண்டும், அரசு அங்கீகரித்த நிறுவனங்களின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். பயிரின் இடைவெளிக்கு தகுந்தவாறு மானியம் வழங்கப்படும். அடங்களில் தோட்டக்கலை பயிர்களை பதிவு செய்து ரேஷன் அட்டை, கம்ப்யூட்டர் சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிக்கான தாசில்தார் சான்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என துணை இயக்குநர் விமலா தெரிவித்துள்ளார்.