பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி 322 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம்

நாமக்கல், ஏப்.19: தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெறுகிறது. இதில் வறுமையில்லா ஊராட்சி, சமூக பாதுகாப்பு கொண்டிருத்தல், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல்-வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்து, நீர் சார்ந்த சூழலை தொடர்ந்து பாதுகாத்தல், அனைவருக்கும் குடியிருக்க மலிவான, பாதுகாப்பான வீடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அமைத்தல், அனைத்து நலத் திட்ட பயன்கள், அடிப்படை சேவைகள் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல், மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை மூலம் பணிகளை செய்துமுடிப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: