இன்று பங்குனி அமாவாசை சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு, மார்ச் 31: இன்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பங்குனி பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. 2ம் நாளான நேற்று காலை 4 மணியிலிருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 7 மணிக்கு கேட் திறந்து விடப்பட்டதும் வனத்துறையினர் பக்தர்களின் உடமைகளை பரிசோதனை செய்த பின்னர், மலையேற அனுமதி வழங்கினர்.

பின்னர் பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய சென்றனர். சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நோ்த்திக்கடன்களை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தனர். இன்று பங்குனி அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: