மன்னார்குடி, மார்ச் 26: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்ற வட்டார அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: திருவாரூர் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் வங்கி கிளைகள் மூலம் ரூ.5626 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு ரூ.4665.25 கோடியும், சிறு மற்றும் குறு கடன்களுக்கு ரூ.373.45 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.587.68 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.962 கோடி அதாவது 17 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.