அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம்

தாராபுரம்.பிப்.18: தாராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தாராபுரம் நகராட்சியில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களை வெற்றி பெறச் செய்த தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுப் பெறவில்லை,அதற்கு பதில் சட்டசபையில் ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி வெளிநடப்பு செய்வதே வேலையாக உள்ளது. இப்படி செய்தால் அவர்களை நம்பி சட்டசபைக்கு அனுப்பிய தொகுதி மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளையும் செய்ய முடியாமல் போய்விடும்.

குறிப்பிட்ட அந்த தொகுதிக்கும் அரசுக்கும் இடைவெளியை ஏற்படுத்தி விடுவார்கள் அதேபோன்ற ஒரு நிலையை தாராபுரம் நகராட்சி தேர்தலிலும் வாக்காளர்களாகிய நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக வேட்பாளர்களை நகர் மன்றத்திற்கு அனுப்பினால் உங்களது வார்டுகளுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் திமுக உறுப்பினர்களால் தமிழக அரசிடம் கேட்டுப் பெற்று விரைவாக செய்து தர முடியும். ஏற்கனவே பத்தாண்டு காலமாக எந்த நலத்திட்ட உதவிகளும் செய்து தரவில்லை. திமுக அரசின் நல்லாட்சியின் பலன்களை பட்டிதொட்டி எங்கும் வாழும் அனைத்து மக்களும் தங்குதடையின்றி பெற வேண்டும் அதற்கு திமுக மற்றும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு உங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது நகர செயலாளர் தனசேகர்,முன்னாள் எம்எல்ஏ பிரபாவதி பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: